Saturday, April 29, 2017

வறுத்தரைத்த கோழிக்கறி / CHICKEN Varutharacha Curry



வறுத்தரைத்த கோழிக்கறி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு மசாலா வகையாகும்.இதனை இட்லி,தோசை ,சப்பாத்தி மற்றும் சாதத்துடனும் சேர்த்து பரிமாறலாம்.சிக்கன் ப்ரோட்டீன் நிறைந்த உணவென்பதால் குழந்தைகளுக்கு நல்லது."அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை மனதில் வைத்து ருசிக்கவும்.அமிர்தத்தையும் பரிசோதித்து சாப்பிடும் காலத்தில் நாம் இருக்கிறோம்.வீட்டிலேயே மசாலா தயாரித்து சமைப்பதால் நல்ல மணத்துடனும் ,சுவை மிகுந்தும் இருக்கும்.நாவில் எச்சில் ஊற பதிவை எழுதுகிறேன்.
உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் கோடை காலங்களில் பெரும்பாலும் சிக்கன் உண்பதை  தவிர்க்கவும் அல்லது சாப்பிட்டபின் எலுமிச்சை பானம்  / மோர் அருந்தலாம். 


வறுத்தரைத்த கோழிக்கறி  :
மசாலா  தயாரித்து - கறியை சேர்த்து வேகவைக்கவும் 
கோழிக்கறி சுத்தம் செய்ய : 10நிமிடம் 
சமைக்க தேவைப்படும் நேரம் : 40நிமிடம் 
பரிமாறும் அளவு  : 3பேர் 

தேவையான பொருட்கள் :

எண்ணெய்                          2மேஜைக்கரண்டி 
கடுகு                                     1தேக்கரண்டி  
கறிவேப்பிலை                 1தழை 
 பச்சை மிளகாய்              1/2
பெரிய வெங்காயம்        1
பெரிய தக்காளி                1
மஞ்சள் தூள்                      1/4தேக்கரண்டி 
இஞ்சி -பூண்டு விழுது   1மேஜைக்கரண்டி 
புதினா இலை                    1கையளவு 
கோழிக்கறி / சிக்கன்      1கிலோ
தண்ணீர்                               4கப் +
கொத்தமல்லி தழை      1கையளவு 
உப்பு                                      தேவையான அளவு 

மசாலா தயாரிக்க :
எண்ணெய்                         1தேக்கரண்டி 
கிராம்பு                                  3
பட்டை                                  1"
ஏலக்காய்                             1
கொத்தமல்லி விதை     2மேஜைக்கரண்டி 
சோம்பு                                  1மேஜைக்கரண்டி 
ஜீரகம்                                    1தேக்கரண்டி 
மிளகு                                     1தேக்கரண்டி 
முந்திரிபருப்பு                    4
கறிவேப்பிலை                   6இலை 
வற்றல் /  காய்ந்த மிளகாய்   6சிறியது / 4 பெரியது 
பூண்டு                                     4பல் 
சின்ன  வெங்காயம்          6
தேங்காய்                               1/2கப் 

செய்முறை :
 # முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் அல்லது உப்பு சேர்த்து 5முறை அலசி சுத்தம் செய்யவும்.


தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில்  வைத்துக்கொள்ளவும்.

1.ஒரு அடிகனமான கடாயில் 1தேக்கரண்டி எண்ணெய் விட்டு மசாலா தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் சேர்த்து மிதமான சூட்டில் 3-4நிமிடம் வரை வதக்கவும்.பின்னர் சிறிது ஆறவைத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.


2.அடிகனமான பெரிய கடாயில் எண்ணெய் சேர்த்து ,சூடானதும் கடுகு சேர்க்கவும்.கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,நறுக்கிய வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து 2-3நிமிடம் வதக்கவும்.நறுக்கிய தக்காளி ,இஞ்சி-பூண்டு விழுது,புதினா இலை சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.


3.சிக்கனை சேர்த்து 3நிமிடம் வதக்கவும்,இப்பொழுது சிக்கன் நீர்விட்டு காணப்படும்.அரைத்த மசாலா,4கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 10-15 நிமிடம் வரை மூடிவிட்டு வேக விடவும்.2நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும்.சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.


 சுவையான  வறுத்தரைத்த கோழிக்கறி ரெடி !!!

 

இட்லி.தோசை,சப்பாத்தி,சாதம் ஆகியவற்றுடன் .பரிமாறலாம்,

குறிப்புக்கள் :

1.கெடாமலிருக்க எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சூடேற்றவும்.
2.பரிமாறும்போது மட்டும்  வேறு பாத்திரத்திற்கு தேவைக்கேற்ப எடுக்கவும், சமைத்த பாத்திரத்தில் வைத்தே காலியாகும்வரை சூடேற்றி சாப்பிடவும்[சமைத்த நாளைவிட அடுத்த நாள் சுவை மிகுந்து காணப்படும்].



உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.



வறுத்தரைத்த கோழிக்கறி பதிவை ஆங்கிலத்தில் காண  CHICKEN Varutharacha Curry



Sunday, April 9, 2017

நீர் மோர் / மசாலா மோர் / ராம நவமி நீர் மோர் / Neer Mor / Spiced Buttermilk


நீர் மோர்,கோடை காலங்களில் உடம்பை குளிர்விக்க அருந்தப்படும் ஒரு நல்ல பானமாகும்.மோரில் பச்சை மிளகாய்,இஞ்சி ,கறிவேப்பிலை ,ஜீரகம் சேர்த்து அடிப்பதால் அதன் சாறு இறங்கி நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.இதனை மசாலா மோர் என்றும் அழைப்பர்.இதனுடன் தாளிப்பு சேர்த்து 'ராம நவமி' அன்று கடவுளுக்கு பிரசாதமாக பானகத்துடன் படைப்பர்.நீர் மோர்,கேழ்வரகு கூழ்,கம்பு கூழ் என கிராமத்து வாசம் நகர்ப்புறங்களிலும் வீச தொடங்கியுள்ளது.மக்கள் பழமையை விரும்புவது பண்பாட்டை தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் நல்லெண்ணமேயாகும்.


கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் மோர் ஆகியவற்றை மண்பானைகளில் வைத்து குடிப்பதால் இயற்கையான முறையில் உடல் குளிர்விக்கப்படுகிறது.

நீர் மோர் : 
மோரில் - காரம்,தாளிப்பு சேர்த்து - அடிக்கவும் 
மொத்த நேரம் : 5நிமிடம் 
பரிமாறும் அளவு : 3பேர் 

வீடியோ : நீர் மோர் 



தேவையான பொருட்கள் :
தயிர்                           1கப் 
தண்ணீர்                    3கப் 
பச்சை மிளகாய்     1
இஞ்சி                         1தேக்கரண்டி 
கறிவேப்பிலை       5இலை 
ஜீரகம்                         1தேக்கரண்டி 
உப்பு                            1தேக்கரண்டி+

எண்ணெய்               1தேக்கரண்டி 
கடுகு                          1தேக்கரண்டி 
பெருங்காயம்         3சிட்டிகை 
கறிவேப்பிலை      5இலை 

செய்முறை :

1.தயிர் மற்றும் தண்ணீரை நன்றாக கரண்டியின் உதவியுடன் கட்டி இல்லாமல் அடிக்கவும்.


2.நறுக்கிய பச்சை மிளகாய் ,இஞ்சி ,கறிவேப்பிலை,ஜீரகம் ஆகியவற்றை சிறிய உரல் அல்லது மிக்ஸியில் எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.


3.எண்ணெய் ,கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின்பு அரைத்த விழுது ,தாளிப்பு ஆகியவற்றை மோருடன் சேர்த்து கலக்கவும்.


மண்பானையில் 2மணி நேரம் வைத்து பின் பரிமாறலாம் அல்லது ஐஸ் கட்டி சேர்த்து கொள்ளலாம்.



உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.





நீர் மோர் பதிவை ஆங்கிலத்தில் காண  Neer Mor / Spiced Buttermilk

Sunday, April 2, 2017

வெல்ல பிடிகொழுக்கட்டை / Sweet Pidi Kozhukattai


 கொள்ளு / கானம் - Horsegram ]


வெல்ல பிடிகொழுக்கட்டை பொதுவாக விநாயருக்கு 'விநாயகர் சதுர்த்தியன்று' படைக்கப்ப்டும்  இனிப்பு வகையாகும்.கொள்ளு,பொட்டுக்கடலை சேர்ப்பதால் இந்த கொழுக்கட்டையின் சுவை மிகுந்தும் ,சத்து நிறைந்தும் காணப்படும்.கொழுக்கட்டையை அவித்து எடுப்பதால் சிரியவர்கள் முதல் பெரியவர்கள்வரை வயிறு உபாதைகள் குறித்து பயமின்றி சாப்பிடலாம்.
அம்மாவின் கைவண்ணத்தில் சத்தான வெல்ல பிடிகொழுக்கட்டை இதோ !!!

வெல்ல பிடிகொழுக்கட்டை :
அரிசி மாவுடன் வெல்லப்பாகு சேர்த்து - கொழுக்கட்டை பிடித்து - ஆவியில் வேகவைக்கவும்  
சமைக்க தேவைப்படும் நேரம் : 30நிமிடம் 
பிடிகொழுக்கட்டை எண்ணிக்கை : 15

தேவையான பொருட்கள் :
வெல்லப்பாகு :
வெல்லம்          1/2கப் 
தண்ணீர்            2 1/4கப் 
சுக்குப்பொடி    1/4தேக்கரண்டி 
ஏலக்காய்          2

கொழுக்கட்டை மாவு :
அரிசி மாவு       1கப் 
எள்                        1மேஜைக்கரண்டி 
கொள்ளு / கானம்                2மேஜைக்கரண்டி 
பொட்டுக்கடலை                2மேஜைக்கரண்டி 
தேங்காய்துருவல் / பல்   2மேஜைக்கரண்டி 
நல்லெண்ணெய் / நெய்    2மேஜைக்கரண்டி 
உப்பு                                          1/4தேக்கரண்டி 

செய்முறை :
# அடிகனமான கடாயில் கானத்தை வெடிக்க துவங்கும்வரை வறுக்கவும்.பின்னர் ஒன்றிரண்டாக பொடித்து அல்லது அப்படியே தனியே எடுத்து வைக்கவும்.


# எள்ளை சிறிது வறுத்து வெடிக்க துவங்கியவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
# 1/4தேக்கரண்டி நெய்விட்டு தேங்காய்ப்பல் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.


1.ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் ,சுக்குப்பொடி ,ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும்வரை மிதமான சூட்டில் கிளறி வடிகட்டியால் வடிகட்டவும். 


2.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு ,பொட்டுக்கடலை ,வறுத்த கானம் ,எள் ,தேங்காய்ப்பல் ,உப்பு ஆகியவற்றை சேர்த்து சூடான வெல்லப்பாகு சேர்த்து கரண்டியால் கிளறவும்.
அரை மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கையால் ஒன்றுசேர பிசைந்து கையில் ஒட்டாத பதம் வரும்வரை பிசைய வேண்டும்.


2.கையில் சிறிது நெய் தடவி,வெல்ல அரிசி மாவை சிறிதளவு கையில் எடுத்து உருண்டையாக்கி பின்னர் கையின் விரல்கள் பதியுமாறு அழுத்தவும்.



3.இட்லி கடாயில் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.இட்லி/கொழுக்கட்டை  தட்டில் சிறிது நெய்/நல்லெண்ணெய் தடவி பிடிகொழுக்கட்டையை அடுக்கிவைத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் தட்டை அடுக்கி மூடியிட்டு ஆவியில் 10-12நிமிடம் வேகவைக்கவும். 


பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து மெதுவாக தட்டை வெளியே எடுக்கவும்.வெந்த கொழுக்கட்டை பளபளப்புடன் காணப்படும்.

வெல்ல பிடிகொழுக்கட்டை தயார் !!!




உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.





வெல்ல பிடிகொழுக்கட்டை பதிவை ஆங்கிலத்தில் காண Sweet Pidi Kozhukattai