கீரை வடை,தேங்காய் சட்னி ,இஞ்சி-ஏலக்காய் தட்டிப் போட்ட சூடான டீ,ஜன்னலுக்கு வெளியே மழையின் மேள-தாளம்,மிதமான ஓசையில் பிடித்தமான பாட்டு,இவையணைத்தும் ஒரே நேரத்தில் அமைந்தால்........ நினைத்துப் பார்ப்பதற்கே மெய் சிலிர்க்கிறது.வழக்கமாக செய்யும் கீரை பொரியல் ,கீரை கூட்டு ,கீரை குழம்பு அல்லாமல் ஒரு மாற்றத்திற்கு இந்த ஆரோக்கியமான கீரை வடையை செய்து ருசித்து பார்க்கவும்.இரும்புச்சத்து ,புரோட்டீன் நிறைந்த இந்தக் கீரை வடையை எந்த வகை கீரை உபயோகித்தும் செய்யலாம்.
கீரை வடை :
பருப்பை ஊறவைக்கவும் - கீரையுடன் மற்றவை சேர்த்து - எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 20நிமிடம்
வடை எண்ணிக்கை : 6-7
கீரை வடை : வீடியோ
தேவையான பொருட்கள் : 1கப் = 250மில்லி / 225கிராம்
கீரை - 1கட்டு (2கப் இறுக்கமான அளவு)
[தண்டுக்கீரை / amaranthus உபயோகித்துள்ளேன் ,எந்த வகை கீரையும் உபயோகிக்கலாம்]
கடலை பருப்பு - 1கப்
சோம்பு / பெருஞ்சீரகம் - 1தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5 (உருண்டை வடிவம் உபயோகித்துள்ளேன்)
இஞ்சி - 1"இன்ச் / 1தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1இணுக்கு
கொத்தமல்லி தழை - 1இணுக்கு
உப்பு - 1தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
# கடலை பருப்பை நன்கு கழுவி 3மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
# கீரைத் தண்டின் அடிப்பாகத்தை சிறிது நறுக்கிவிட்டு ஓடு தண்ணீரில் கீரையை அலசவும்.அதன் பிறகு கீரையை தண்டுடன் சிறிதாக நறுக்கவும்.
# கழுவிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை, இஞ்சி,வெங்காயம் அணைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
1.ஊறிய பருப்பிலிருந்து நீரை நன்கு வடித்துவிட்டு,வாயகன்ற பாத்திரத்தில் 1மேஜைக்கரண்டி அளவு ஊறிய பருப்பை எடுத்து வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் பெருஞ்சீரகம்,காய்ந்த மிளகாய் ,இஞ்சி,பாதியளவு பருப்பு சேர்த்து கொரகொரப்பாக பல்ஸ் /pulse -ல் வைத்து 5-6முறை அரைக்கவும். கொரகொரப்பான விழுதை பாத்திரத்தில் சேர்க்கவும்.மீதமுள்ள பருப்பையும் இதேபோல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
[3மணி நேரம் ஊற வைப்பதால் அரைக்கும்பொழுது தண்ணீர் தேவைப்படாது.ஒவ்வொரு முறை அரைத்த பின்னரும் ஜாரின் உள் விளிம்பை வழித்து ஒன்றுசேர அரைக்கவும்]
2.கீரை,கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை,வெங்காயம்,உப்பு அணைத்தையும் பருப்புடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.உப்பு மற்றும் கார அளவை சரி செய்ய சிறிது ருசி பார்க்கலாம்.தேவையான அளவு அரைத்த விழுதை கையில் எடுத்து முதலில் உருண்டையாக உருட்டி பின்னர் அதைத் தட்டி மற்றொரு தட்டில் வைத்து கொள்ளவும்.
3.கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்றவும்.சிறிதளவு மாவை எண்ணெயில் போட்டவுடன் அது உடனடியாக பொரிந்து மேலே வந்தால் எண்ணெய் பொரிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது என்று அர்த்தம்.
தட்டி வைத்த வடையை 3-4எண்ணிக்கையாக (அல்லது உங்கள் கடாயின் அளவுக்கேற்ப) மெதுவாக போட்டு 1 1/2 - 2நிமிடம் வரை வேக வைக்கவும்.வடை பொன்னிறமாக வந்ததும் கரண்டியின் உதவியுடன் திருப்பி போட்டு 1/2-1நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.எண்ணெயை உறிய பேப்பர் டவலில் வடையை சிறிது நேரம் வைக்கவும்.
சூடாக பரிமாறவும்.
சூடான,சுவையான கீரை வடை ரெடி !!!
குறிப்புகள் :
1.பருப்பை 3மணி நேரம் ஊறவைப்பதால் அரைக்கும் பொழுது தண்ணீர் தேவைப்படாது.தேவைப்பட்டால் 1மேஜைக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.
2.பெருஞ்சீரகம் சேர்ப்பது ஜீரணத்துக்கு மட்டுமல்லாது வடைக்கு நல்ல மணத்தை கொடுக்கும்.
3.கீரையை ஓடுதண்ணீரில் கழுவுவதே வழக்கம்.காய்கறிகளை கழுவிய பின்னரே நறுக்க வேண்டும்.நறுக்கிய பின்னர் கழுவினால் சில சத்துகள் அழிந்து விடும்.
4.வடைக்கு கீரையின் இலைப்பகுதியை மட்டும் உபயோகித்து தண்டுப்பகுதியை சாம்பார் மற்றும் புளிக்குழம்பில் சேர்க்கலாம்.
5.எண்ணெயை உறிய பேப்பர் டவல்/tissue பேப்பர் உபயோகிக்கவும்.நாளிதழ் / newspaper உபயோகிப்பதால் மையின் ஆச்சு பதிந்து உணவு விஷத்தன்மையானதாகிறது.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பதிவை ஆங்கிலத்தில் காண Keerai Vadai / Spinach Vadai .
No comments:
Post a Comment